Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கவுகாத்தி: இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி, 113 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா 83 ரன்களும், ஷூப்மான் கில் 70 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின், துவக்க வீரர் பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. அவிஸ்கா பெர்னாண்டோ 5 ரன்னிலும், குஷால் மெண்டிஸ் ரன் எடுக்காமலும், அசலங்கா 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதிரடியாக ஆடிய தனஞ்செயா டி சில்வா 9 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் வலுவான நிலையில் இருந்த பதும் நிசங்கா, 72 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
ஹசரங்கா டி சில்வா (16) துனித் வெல்லாலகே (0), கருணாரத்னே (14) என பின்கள வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். நெருக்கடிக்கு மத்தியில் அசராமல் நின்று ஆடிய கேப்டன் தசுன் சனகா சதம் அடித்தார். எனினும், 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களே சேர்த்தது.
எனவே இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய கேப்டன் தசுன் சனகா 108 ரன்களுடனும், ரஜிதா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிராஜ் 2 விக்கெட் எடுத்தார். இந்த வெற்றியின்மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 12ம்தேதி நடக்கிறது.